மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாட்டுவண்டிச் சவாரியில் ஏற்பட்ட மோதலே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
மன்னார் – உயிலங்குளம் பகுதியில் கடந்த வாரம் மாட்டுவண்டிச் சவாரியொன்று நடைபெற்றுள்ளது. வெட்டிக் கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் நொச்சிக்குளத்தில் வசித்து வருகிறார். அவருடனும் மாட்டு வண்டிச் சவாரியின்போது நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர் என்று
தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் நொச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாடு கட்டச் சென்றுள்ளார்.
இதன்போது மாட்டுவண்டிச் சவாரியின்போது தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த நபர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனரெனத்
தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த அவர், பிரதான வீதிக்கு ஓடிவந்துள்ளார். வீதியில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு
அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தமது உறவினர் தாக்கப்பட்டமை குறித்து நியாயம் கேட்பதற்காக, உயிலங்குளத்தைச் சேர்ந்த சகோதரர்களான யேசுதாசன் றோமியோ (வயது -40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (வயது-33) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நொச்சிக்குளம் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த இருவரையும் வீதியில் இடைமறித்து அவர்கள் மீதும் கடும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மன்னாரில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.