மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் பெண்ணொருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த சம்பவத்தில் பொலிசார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உறவினர்கள் நீதி வேண்டி பொலிசாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சனிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தந்தையுடன் வந்த பிள்ளைகள் மூவர் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
‘வீடு புகுந்து தாக்கியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.’ ‘வாழைச்சேனை பொலிசார் ஒரு பக்கச் சார்பாக நடப்பது ஏன்.’ ‘எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். ‘ என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தெரியவருகையில்,
கடந்த புதன் கிழமையன்று பதுரியா வீதி பிறைந்துறைச்சேனையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற பிணக்கானது கைகலப்பாக மாறி உள்ளது.
இதன்போது, உதுமாலெப்வை றிசானா வயது (36) என்ற குடும்பப் பெண் தலையில் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தும் சந்தேக நபர்களுக்கெதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்காது நாட்கள் கழித்ததினால் நீதி வேண்டி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் இவர்களுக்கு ஆதரவாக ஒன்று கூடினர்.
குறித்த நிலவரத்தினை அறிந்து கொண்ட பொலிசார் ஓன்று கூடியவர்களை கலைந்து செல்லுமாறு பணித்து போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
சந்தேக நபர்களை கைது செய்தால் மாத்திரமே தமது போராட்டத்தினை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் பதில் தெரிவித்தனர்.
நிலமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொலிசார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதனை தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.







பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!