எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்கு சென்றுவிடவில்லை: சஜித்

கொழும்பு,ஜுன் 16

இன்று அரசாங்கம் வக்குரோத்தடைந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிடவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம் வேலைத்திட்டம், பேருந்து நன்கொடை திட்டம் போன்ற சமூக நல திட்டங்களை செயல்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் கல்வி முறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம்,
விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பாடப்பரப்புகள் முறையாகவும், வினைதிறனாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதைவிடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறைபாடுகள்,போதாமைகள் மற்றும் இயலாமைகளை கூற அரசாங்கமொன்று தேவையில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வாயாடல்கள் மற்றும் அறிக்கைகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழிநுட்பத்தில் பரிச்சயமான உலகில் கொடிகட்டிப் பறப்பதற்கு உதவும் முகமாக “வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை” வழங்கி வைக்கும் “பிரபஞ்சம்” முன்னோடித் திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இன்று (16) மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள நவயாலதென்ன கடுகஸ்தோட்டை, சமுத்திராதேவி மகளிர் கல்லூரிக்கு, எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (846,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *