முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது மே.தீவுகள்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 42 ஓட்டங்களுடனும் போனர் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 103 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகிப் அல் ஹசன் 51 ஓட்டங்களையும் டமீம் இக்பால் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரோச் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி இன்று தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *