
வவுனியா,ஜுன் 29
வவுனியாவில் காணாமல்போன ஒருவர் இன்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா குடியிருப்பு குளத்துக்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவர் கடந்த சனிக்கிழமை (25) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரைத் தேடும் பணியில் உறவினர்களுடன் இணைந்து பொதுமக்களும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர் கிடைக்காமையினால் நேற்றுமுன்தினம் (27) மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று (29) மாலை குடியிருப்பு குளத்துக்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் பொதுமகன் ஒருவர் கழிவகற்றல் நடவடிக்கைக்காக சென்றபோது அப்பகுதியில் சடலம் ஒன்றை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.