
இந்தியா,ஜுன் 29
ஒஸ்கர் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஒஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஒஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர்.
இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஒஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப்பட்டியலில் 276 திரைப்படங்களில் சூர்யா நடித்த `ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்து போட்டியிட்டது.
இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்து.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக,ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை! எனமுதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்துள்ளார்.