முகமது நபியை அவதூறு செய்த தையல்காரரின் கழுத்து அறுத்து கொடூர கொலை

முகமது நபியை அவதூறு செய்த நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட டெய்லர் ஒருவரை படுகொலை செய்த இரண்டு நபர்களை போலீஸார் வாகனத்தில் சென்று துரத்திப் பிடித்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பைக்கில் செல்லும் இருவரையும் போலீஸார் ரோந்து வாகனத்தில் விரட்டி மடக்கிப் பிடிக்கின்றனர்.

காவலர்கள் அவர்கள் இருவரையும் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பின்னர் மேலும் இரண்டு காவலர்கள் பைக்கில் வர அனைவரும் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்கின்றனர்.

உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வருபவர் கானியா லால். இவர் தனது சமூகவலைதளங்களில் அடிக்கடி நுபுர் சர்மா பற்றி பதிவுகளைப் பகிர்ந்ததாகத் தெரிகிறது. இதற்காக கானியா லாலுக்கு பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கவுஸ் முகமது, ரியாஸ் அட்டாரி ஆகிய இருவரும் துணி தைக்க அளவு கொடுப்பதுபோல் கானியா லாலின் கடைக்குச் சென்றுள்ளனர்.

அவரும் அட்டாரிக்கு அளவு எடுக்கிறார். அப்போது அட்டாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கானியாவை தாக்குகிறார். கானியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார். இந்தச் சம்பவத்தை முகமது கவுஸ் படம் பிடிக்கிறார்.

பின்னர் இருவரும் சேர்ந்து இறைத்தூதரை அவமதித்தற்கான பாடம் என்று கூறுவதுடன், பிரதமர் மோடிக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பின்னர் அந்த இடத்திலிருந்து இருவரும் கிளம்பிவிடுகின்றனர். அவர்கள் எடுத்த வீடியோ பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களுக்கும் அனுப்பப்பட்டு அங்கிருந்து வைரலாக பரவுகிறது.

இந்த வீடியோ குறித்து உதய்பூர் காவல்துறை மூத்த காவலர் ஹவாசிங் குமாரியா கூறுகையில், அந்த வீடியோவை பொதுமக்கள் யாரும் திறந்து பார்க்க வேண்டாம். வீடியோ மிகவும் கொடூரமாக இருக்கிறது. ஊடகங்களும் இதனை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கானியா லாலின் தலையை தனியாக துண்டிப்பதே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இலக்காக இருந்துள்ளது. அது முடியாததால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினர்.

படுகொலை செய்த பில்வாராவைச் சேர்ந்த ரியாஸ் அட்டாரி (38), உதய்பூரைச் சேர்ந்த கவுஸ் முகமது ஆகியோர் படுகொலைக்குப் பின்னர் அங்கிருந்து தப்பித்து ஆஜ்மீர் ஷரீஃப் தர்காவை நோக்கிச் சென்றனர். அங்கிருந்து ஒரு வீடியோவை எடுத்து பரப்புவதே அவர்களின் திட்டம்.

ஆனால் அதற்குள் அவர்களை போலீஸார் ராஜ்சமந்த் என்ற இடத்தில்வைத்து மடக்கிப் பிடித்தனர். இவர்கள் இருவரும் சன்னி முஸ்லிம் பிரிவின் சூஃபி பரேல்வி உட்பிரிவைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவர் மீதும் சட்டவிரோத ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ள முதல்வார் அசோக் கெலாட் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இருவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக என்ஐஏ குழு ஒன்று உதய்பூர் சென்றுள்ளது. உதய்பூரில் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன்னி முஸ்லிம்களின் அடிப்படைவாத அமைப்பான தாவத்,இஸ்லாமி குழுவுடனும், தெஹ்ரிக், லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்புடனும் கொலையாளிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நோக்கி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *