
கல்முனை வடக்கு பிரதேச அரச காணிகளை தனியார் சுவிகரிக்க கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உடந்தையாக உள்ளார் – மாநகரசபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் குற்றச்சாட்டு
மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரச காணிகளை தனியார் அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உடந்தையாக இருப்பது துர்ப்பாக்கிய நிலைமையே. இது இரண்டு இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து இன சகவாழ்வுக்கு பங்கங்களை ஏற்படுத்தும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்முனை 01 C கிராம சேவகர் பிரிவிலுள்ள நீர் தேங்கி நிற்கும் காணியில் தனியார் ஒருவர் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதில் பங்குபற்றியிருந்த மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் மேலும் தெரிவிக்கையில்
அரச காணிகளையும் நீர் ஏந்து நிலங்களையும், நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை போவது வேதனையளிக்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட அரச காணிகளை தனியார் அபகரிக்கும் செயற்பாடுகளுக்கு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தொடர்ச்சியாக துணை போகின்றார்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம் ஆனால் அதற்காக எந்த தீர்வும் இல்லை என்றார்.