
கொழும்பு, ஜுன் 30
கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிஸார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னேள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும் அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன விடுத்த உத்தரவை இரத்துச் செய்து ‘ ரிட் ‘ ஆணை ஒன்றை (எழுத்தாணை) பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க இன்று (30) மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் இந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.