நெருக்கடிக்கு மக்களை பழக்கப்படுத்த முயற்சிக்கும் அரசு! – முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் கூட நிதியை கொள்ளையிடும் வேலைகளை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மூன்று வாரங்கள் எரிபொருள் இல்லாமல் செய்து, மக்களை நெருக்கடிக்கு பழக்கப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அடுத்த எரிபொருள் கப்பல் ஜூலை 22 ஆம் திகதியே வரும் என சாகல ரத்நாயக்க கூறினார்.

இதனை ஜூன் 29 ஆம் திகதி தெரிவித்தார். அப்படியானால், எமது நாட்டு மக்கள் மூன்று வார காலம் எரிபொருள் இல்லாமல் இருக்க வேண்டும். மக்களை நெருக்கடி நிலைமையை சமாளிக்க பழக்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.

வெளிநாட்டு மயப்படுத்தும் ஒரு அங்கமே மக்கள் வரிசையில் நிற்பதை பழக்கப்படுத்தி, எரிபொருள் தட்டுப்பாட்டை நீடித்து, எந்த வழியிலாவது எமக்கு எரிபொருள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையை மக்களுக்கு ஏற்படுத்துவது.

அப்போது வெளிநாட்டு நிறுவனமோ, நரகத்தில் இருந்தோ எமக்கு எரிபொருள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையை மக்களுக்கு ஏற்படுவதற்கான நிலைமையை உருவாக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியிலும் கொள்ளையடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடை எரிவாயுவை நிரப்பக் கூடிய 50 லட்சம் லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் வெற்றாக இருக்கின்றன.

இவற்றை நிரப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன. ஒரு மெற்றி தொன் சமையல் எரிவாயுவுக்கு மேலதிகமாக கப்பல் கட்டணத்துடன் மொத்த தொகை 96 டொலராக இருந்தது.

இந்த நிலையில் விலை மனுக்களை கோராது ஓமான் நிறுவனத்திற்கு 129 டொலர்களை அதாவது 39 டொலர்களை அதிகமாக வழங்கி,2 லட்சத்து 50 ஆயிரம் மெற்றி தொன் சமையல் எரிவாவை கொண்டு வரும் உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *