எரிபொருள் மற்றும் எரிவாயு கேட்டு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வருவதால் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பல எம்.பி.க்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
சிலர் தங்கள் வீடுகளுக்கு வந்து எரிபொருள் கேட்டு வம்பு செய்வதாகவும், சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி கோருவதாகவும் அமைச்சர்கள் குழுவினர் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இதற்கு முன்னர் அமைச்சர்களிடம் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கோரியவர்கள் தற்போது பத்து அல்லது பதினைந்து லீற்றர் எரிபொருள் கேட்கின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் பிரச்சினை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நாட்களில் புகையிரதங்களையும், பொது பயணிகள் பேருந்துகளையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைதூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கிடைக்காததாலும், கொழும்புக்கு வருவதற்கு தேவையான எரிபொருளுக்கு பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியதாலும் நாடாளுமன்ற கூட்டங்களை நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பிற செய்திகள்