சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருமளவு மஞ்சள் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை மஞ்சளும் கிருமிநாசினியும் நேற்றிரவு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஆவது படைமுகாம்களின் இராணுவத்தினரால் குறித்த மஞ்சள் மீட்கப்பட்டு பூநகரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள் கொண்டு வரப்பட்ட தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 65 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சளும், 03 பைகளில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

இம்மஞ்சள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தொகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *