
அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் இல்லை_ பொலிஸ்மாஅதிபர்!
பொலிஸ்மா அதிபர் இது தொடர்பாக இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் , கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குள்ள உரிமைக்கு இலங்கை பொலிஸார் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிப்பதாக குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் அவ்வப்போது தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கும் போது, ஏனையவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சட்டங்களை மீறும் வகையிலும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்பட்டு அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களால் பொறுமை காக்க முடியாது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காது, கடமையில் உள்ள ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்காது, சட்ட வரையறைக்குள் எதிர்ப்பினை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.