
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம், பொதுமக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலம், முறையான அரசியல் சீர்திருத்தத்தில் ஈடுபடும் நோக்கத்தை நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உருவாக்காது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கருதுவதாக, சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள உத்தேச 22வது திருத்தம், அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சுதந்திரத்திற்கு போதுமான உத்தரவாதத்தை வழங்கவில்லை.
அரசியலமைப்பு பேரவையில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மூவரும் இருப்பார்கள்.
22 வது திருத்தத்தின்படி, அரசியலமைப்பு பேரவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களான மூவரை நியமிப்பதற்கு, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம் அவசியமாகும்.
இதன்படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரால் அரசியலமைப்பு பேரவையை கட்டுப்படுத்த முடியும்.
எனவே இது அரசியலமைப்பு பேரவையின் திறனை மோசமாக பாதிக்கும் எனவும் பீரிஸ் தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை, சுயாதீனமாக இல்லாவிட்டால், அந்த பேரவையின் ஒப்புதல்களின் சுயாதீனம் பற்றிய கேள்வி எழும் என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை மா அதிபர் உட்பட முக்கிய அதிகாரிகளை அரசியலமைப்பு பேரவையே அங்கீகரிப்பதால், அதன் சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று பீரிஸ் குறிப்பிட்டார்.
22வது திருத்த்தில் மத்திய வங்கியின் ஆளுநரை உள்ளடக்கிய போதிலும், மத்திய வங்கியின் நாணயச் சபை, அரசியலமைப்பு பேரவையின் எல்லைக்குள் கொண்டுவரப்படவில்லை
22வது திருத்தம் தற்போதைய நாடாளுமன்றத்தின் கீழ் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் போதுமான எதிர்சமநிலைகளை உருவாக்கவில்லை.
22 வது திருத்தத்தின் பிரதம மந்திரியை நீக்குவது மற்றும் அமைச்சரை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான பொறுப்புக்களை வழங்குவது தொடர்பான விதிகள் பொருந்தவில்லை என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டு்ள்ளார்.
எனவே தற்போதைய நாடாளுமன்ற காலத்தில், நடப்பு ஜனாதிபதி தொடர்பில் எதிர்சமநிலைகளை அறிமுகப்படுத்தமுடியவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்