
கொழும்பு, ஜூலை 8:
நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா ஆகியோர் விரிவாக ஆராய்ந்தனர்.
குறிப்பாக, கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்பலனாக, எதிர்வரும் வாரங்களில் கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசலை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த டீசலை இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான பொறிமுறை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் விரிவாக ஆராய்ந்ததுடன், கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை எடுத்து வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்தனர்.