பிரதமரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், தனியார் ஊடகமொன்றும் அரசியல் கட்சியொன்றும் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.
போராட்டத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான செயற்பாடாகவே இதனை நாம் கருதுகின்றோம்.
மற்றையவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பது என்பதும் மிகவும் பாரதூரமானது.
அரசியல் ரீதியிலான போராட்டமெனில் அது ஜனநாயக ரீதியிலான போராட்டமாக அமைய வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்களுக்கு மனிதாபிமான ரீதியிலும் ஜனநாயக ரீதயிலும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட நபராவார்.
பிரதமரின் வீட்டுக்கு அருகில் வந்தவர்கள் யார், யார் இந்த சம்பவத்தை புரிந்தனர், அவர்களது அரசியல் பின்னணி என்ன என்பது தொடர்பிலான சகல விடயங்களையும் காணொளி மூலமாக நாம் ஊடகங்களுக்கு அறிவிப்போம்.
அதன் பின்பு இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.
உண்மையில் பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்படவில்லை. தீ வைப்பதற்கு தூண்டப்பட்டதாகவே கருதுகின்றோம் என்றார்.