
டெல்லி, ஜுலை 11
ராஜபக்ஷ கேட்டுக்கொண்டால் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அங்கு மக்கள் போராட்டம் மிகவும் தீவிரமடைந்தது. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்க அங்கு புதிய பிரதமரானார்,
வெளிநாடுகள் இலங்கைக்கு உதவத் தயங்குவதாகக் கூறப்பட்டது. இந்தியா மட்டுமே எரிபொருள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவி வந்தது. இதை ரணில் விக்கிரமசிங்கேவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றவும் செய்துள்ளனர்.
இந்தச் சூழலில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இலங்கை விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது ராஜபக்ச கேட்டுக்கொண்டால் இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.