
கொழும்பு, ஜுலை 11
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 113 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனக லலித் ஜயசேன என்ற கொமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் எனவும் அவர் மாத்தறையிலிருந்து போராட்டத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 113 பேரில் 9 பெண்களும் அடங்குவதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.