புகையிரத நிலைய அதிபர்கள் பொது முகாமையாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜூலை 9 ஆம் திகதி புகையிரதங்களின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவான உத்தரவுகளை ரயில்வே பொது முகாமையாளர் வழங்காமையே அன்று காலை பல பகுதிகளில் பயணிகளுக்கும் புகையிரத நிலைய அதிபர்களுக்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்தியதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது பொது முகாமையாளரின் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என திணைக்களத்தின் தலைவரான சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

ஜூலை 8 ஆம் திகதி இரவு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 9 ஆம் திகதி விடியற்காலை கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் அவிசாவளை ஆகிய புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் இயங்காததால் பயணிகள் புகையிரத நிலைய அதிபர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இது வேண்டுமென்றே சேவைகளை சீர்குலைக்கும் செயல் என்றும், மனித உரிமைகள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜூலை 9 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் போராட்டக்காரர்களை தடுப்பதற்கு ரயில்வே பொது முகாமையாளர் செயற்பட்டதாக ரயில்வே ஊழியர்களின் கூட்டுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்தார்.

பயணிகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி பொது முகாமையாளர் ரயில் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எழுத்துப்பூர்வ உத்தரவு ஏதுமின்றி பொது மேலாளர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளை அரசியலாக்கக் கூடாது என்றும், எனவே பொது முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *