ஆக்கிரமித்த சொத்துக்களை அரச அதிபரிடம் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை!

ஆர்ப்பாட்டக்காரர்கள் கையகப்படுத்திய ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட புராதன கட்டடங்களை உடனடியாக கொழும்பு மாவட்ட அரச அதிபரின் பொறுப்பில் எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அதில், 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் காலி முகத்திடம் போராட்டத்தின் இறுதிக்கட்டத்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து கொழும்பு வந்த மக்களுக்கு முதலில் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

இதன்போது, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், ஜனாதிபதி செயலகம், பிரதமர் இல்லம் ஆகிய இடங்கள் பலத்த முயற்சியின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

ஊழல் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்தக் கட்டடங்களைக் கையகப்படுவதை நாம் புரிந்துகொண்டாலும், அந்தப் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதும், வருங்கால சந்ததியினருக்கு அவற்றை அளிப்பதும் எமது பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

போராட்டத்துக்கு வந்த ஒரு சில மக்களால் ஏற்படுத்தப்பட்ட சேதம் மேலும் தொடரக்கூடாது என்பது எமது கருத்து. எனவே அந்த கட்டடங்களை செஞ்சிலுவை சங்கம் போன்ற நடுநிலையாளர்கள் ஊடாக கொழும்பு மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றோம்.

இந்த பழங்கால கட்டடங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *