
கொழும்ப,ஜுலை 13
நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த, போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது என பாதுகாப்பு படைகளின் தளபதிகள் அறிவித்துள்ளனர்.
பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகருக்கு இதனை அறிவித்துள்ள அவர்கள், நெருக்கடிக்கு அரசியல் ரீதியிலான தீர்வைக் காணுமாறு கோரியுள்ளனர்.
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்ர சில்வா, தரை, கடல் மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இதனை அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இன்று ( 13) பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்ட போது, பாதுகாப்பு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்போதே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் பின் வாங்கியதால், கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்துக்கு மேலதிகமாக ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டை நடத்த பொலிஸார், அதிரடிப் படையினர் முயற்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.