தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அனர்த்தத்தை தமிழர் தரப்பு மிகவும் நிதானமாக அவதானித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து விடாது முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
போராட்டத் தரப்பிடம் கை தட்டு வாங்குவதற்காக தமிழரின் அபிலாசைகள் சார்ந்த விடையங்கள் இல்லாத கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சொல்வது எந்த வகையில் நியாயம்?
இந்த நாட்டில் அரசியலமைப்பை மீறி உடனடி மாற்றங்கள் நிகழ்ந்து விட வாய்ப்பில்லாத போது எதிர்கால மாற்றங்கள் எவ்வாறு அமையும் என்ற பிராந்திய பூகோள நாடுகளின் இராஐதந்திர வியூகங்களை புரிந்து கொள்ளாது தனிப்பட்ட நலன்களுக்காக அதிகாரத் தரப்புக்களை விமர்சித்தல் இனத்திற்கான பின்னடைவாகவே அமையும். தமிழர் தரப்பாக ஒற்றுமையாக ஒருமித்த நிலைப்பாட்டை நிதானமாக கையாள்வதே இனத்தின் எதிர்கால அரசியலுக்கு சிறந்தது.
பெரும்பாண்மை சிங்கள மக்களிடம் நல்லவர் என்ற பெயர் எடுக்க சிங்கள அதிகார வர்க்கத்தை காப்பாற்ற கடந்த காலத்தில் நடந்து கொண்ட செயற்பாடுகளை யாரும் மறக்கவில்லை உதாரணமாக சமஸ்டியை தமிழர்கள் கைவிட்டனர் மற்றும் இனப்படுகொலை நடைபெறவில்லை , போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டது , மனித உரிமைப் பேரவையில் காலநிடிப்பு வழங்கியது போன்ற பல காட்டிக் கொடுப்புக்களை கூறமுடியும்.
ஆட்சி மாற்றங்களும் ஆள் மாற்றங்களும் கடந்த காலத்தில் பல பாடங்களை தமிழர்களுக்கும் நாட்டிற்கும் கற்றுத் தந்துள்ளது . சக இனங்களை மதிக்காது பௌத் சிங்கள இனவாதத்தை நோக்கி பொங்கி எழுந்த சிங்கள மக்களுக்கு வரலாறு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது இது சிங்கள இளைய தலைமுறையிடம் எதிர்காலத்தில் உறுதியான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
ஆகவே பௌத்த சிங்கள இனவாத தரப்பிடம் பெரிய மாற்றங்கள் துளியளவும் ஏற்படாத போதும் போராட்டத் தரப்பு தமிழரின் நியாயங்களை வெளிப்படுத்தும் வரைக்கும் தமிழர் தரப்பு நிதானமாக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பிறசெய்திகள்