மூன்று எரிபொருள் கப்பல்கள் நாளை நாட்டிற்கு வருகை!

எரிபொருள் ஏற்றிச் செல்லும் பல கப்பல்கள் நாளை (15) பின்னர் இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதில் நாற்பதாயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள இரண்டு டீசல் கப்பல்களும், நாற்பதாயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள ஒரு பெட்ரோல் கப்பலும் அடங்கும்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமையின் கீழ் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முறைமையின் பிரகாரம் இந்த எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 109 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விடுவிக்கப்படும்.

கார்களுக்கு 20 லீற்றர் எரிபொருளும், முச்சக்கரவண்டிகளுக்கு 8 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 6 லீற்றர் எரிபொருளும் வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை விநியோகிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பதினைந்து நாட்களுக்குள் எரிசக்தி அமைச்சின் செயலாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *