இலங்கை மக்களுக்கு நேற்று பண்டிகை! நாடெங்கிலும் பட்டாசு வானைப் பிளந்தது.
எழில் மிகு இலங்கை திரு நாடு ஆட்சியாளர்களின் ஊழல், இனவாத போக்கு, குளறுபடியான ஆட்சியால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு மக்கள் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு பாரிய இன்னலை சந்திக்க தொடங்கினர்.
இந்த நிலைக்கு பிரதான காரணமான ஆட்சியில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீது மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர். மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் எதிரொலியாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச பதவி விலகி இருந்தார்கள்.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாது தொடர்பு மறுத்து வந்த நிலையில் மக்களின் பேரெழுச்சி காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓடி நேற்று 14 ஆம் திகதி ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு உலக நாடுகளின் அதிருப்தியின் காரணமாக தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இன மத மொழி கட்சி வேறுபாடு இன்றி இலங்கையின் சுபிட்சத்துக்காக போராடிய ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறியது. நேற்றைய தினம் நாட்டின் பல இடங்களிலும் சுமார் 100 நாட்களாக போராட்டம் இடம்பெற்ற காலி முகத்திடலிலும் பட்டாசுகள் வானில் பிளந்ததுடன் பாச்சோறு வழங்கியும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இனி வரும் ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு…