கோட்டா-ரணிலை வெளியேற்றுவது மட்டுமே போராட்டத்தின் நோக்கம் அல்ல- ஜே.வி.பி வலியுறுத்து!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மக்களின் உண்மையான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும், புதிய ஆணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இன்னமும் கொண்டுள்ளது. இந்த பாராளுமன்றத்தை அமைப்பது நாட்டை ஸ்திரப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உதவாது. குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்து நாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

இந்த போராட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளியேற்றுவதற்காக மாத்திரம் அல்ல மாறாக முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

“ஜனாதிபதியை வெளியேற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தாலும், 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கை, அரசியல் கலாச்சாரம், நீதித்துறை மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துதல், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவையே போராட்டத்தின் மையமாக இருந்தது. தற்போதைய பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாகத்தால் இந்த நோக்கங்களை அடைய முடியாது என்றும் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *