
மக்களின் கருத்துக்களை செவிமடுத்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் நாட்டின் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு அது தொடர்பில் அவதானம் செலுத்தவும் தீர்வுகளை முன்வைக்கவும் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு அப்பால் தற்போதைய நிலைமைகள் அரசியல் பேரழிவை நோக்கிச் செல்லும் வகையில் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் காணப்படும் ஊழல் ஆட்சி முறையைக் கண்டித்தும், சீர்திருத்தங்களுக்காகவும் அச்சமின்றி பல தியாகங்களைச் செய்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நாட்டு மக்களினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் ஆட்சிக்காக அமைதியான, அரசியல் சார்பற்ற போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்