இந்தியாவில் பிரதமர் திரு. மோடி அவர்களினால் புதிதாக பாதுகாப்புத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் என்னும் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்புத் திட்டம் நாடு முழுவதிலும் பல வாதபிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் மேற்படி திட்டம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்குமாறு எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாகுஜன் சமாஜ் (பி. எஸ். பி) கட்சி போன்றவை பாராளுமன்ற அவைத் தலைவரிடம் கோரிய போதிலும், மேற்படி திட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி இரண்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அக்னிபாத் திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டால் அது மிகப் பெரிய அளவில் முடிவின்றி செல்லும் என்பதால் அவைத் தலைவர் திட்டமிட்டே ‘அக்னிபாத் திட்டம்’ தொடர்பான விவாதத்தை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கவில்லை என எதிர்க் கட்சிகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியாவில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தரம் குறைவாக மதிப்பிடப்பட்டு வருவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிட்டு வருவதும் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.