ரணில் மன்னிப்பு கோர வேண்டும் – CPA வலியுறுத்து!

கோட்டகோகம போராட்ட தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தொடர்பில் பகிரங்க மன்னிப்பை கேட்கவேண்டுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான மையம், குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான ‘தாக்குதல்’ குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். அத்துடன் அவசரகால பிரகடனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மையம் வலியுறுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேற விரும்புவதைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அதற்கு அவகாசம் அளிக்காமல், நடத்திய தாக்குதல்கள் கொடூரமானது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியாகவும், ஆயுதப்படைகளின் தளபதியாகவும் உள்ள விக்ரமசிங்க இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளை ஒரு அரசியல் கட்சியினால் தீர்க்க முடியாது.

அத்துடன் இதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை நாட முடியாது என்றும் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *