
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை கருத்திற்கொண்டு, பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம், தமது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் அத்தியாவசியம் தவிர்ந்த பயணங்களைத் தவிர்க்குமாறு அந்த அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
எனினும் இலங்கையின் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக வான் போக்குவரத்துக்கு இந்த அறிவுரை பொருந்தாது.
இலங்கையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம்.
எனவே பாரிய கூட்டங்களின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா, தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் குறுகிய அறிவிப்பில் மேலும் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படலாம்.
இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உட்பட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை (டீசல் மற்றும் பெட்ரோல்) போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை இது பாதித்துள்ளது.
மின்சார விநியோகத்தில் நாள்தோறும் தடை ஏற்படுத்தப்படுகிறது என்றும் பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.