தூதுவர்களை அழைத்து சீறிப் பாய்ந்தார் ரணில்! முதல் சந்திப்பிலேயே காட்டம்

அமெரிக்கா உட்பட முக்கிய பல நாடுகளின் தூதுவர்களை நேற்று மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களோடு பேச்சு நடத்திய புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் சம்பந்தமாக அவர்கள் மீது சீறிப் பாய்ந்தார்.

“இப்படிப் போராட்டக்காரர்கள் உங்கள் நாட்டில் உங்கள் ஜனாதிபதியின் அலுவலகத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற மறுத்தால் உங்கள் அரசுகள் அதை அனுமதிக்குமா?” – என்று ஒவ்வொரு தூதுவரையும் பார்த்துக் கேட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

”உரிய அதிகாரிகளுடன் உண்மை நிலையை உறுதிப்படுத்தாமல் வெறுமனே சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னைக் கண்டித்து செய்திகள், தகவல்கள் வெளியிடுவது எப்படிச் சரியாகும்?” – என்று அவர்களைப் பார்த்து ஜனாதிபதி கேட்டார்.

“நீங்கள் ஆக சமூக ஊடகங்களை மட்டுமே நம்பிச் செய்திகளை, குறிப்புகளை, அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்” என்று அவர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார்.

”உரிய அதிகாரிகளோடு விடயங்களை உறுதிப்படுத்தாமல் நீங்கள் வெளியிடும் கருத்துக்களால் இலங்கை பற்றி சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளன” – என்று அவர் நேரடியாகவே குற்றம் சுமத்தினார்.

“உங்களில் பலரினதும் நடவடிக்கைகள் தொடர்பாக நான் அதிகம் அதிருப்தியுற்றிருக்கின்றேன்” – என்ற சாரப்பட அவர் கருத்து வெளியிட்டார்.

அமெரிக்கத் தூதுவரைப் பார்த்து, “இப்படியான ஆக்கிர்மிப்பு வொஷிங்டனில் நடந்தால் அதை உங்கள் நாடு அனுமதிக்குமா?” – என்று கேட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “”உங்கள் நாட்டின் சரித்திரத்தை ஆபிரகாம் லிங்கனிலிருந்து படித்துக்கொண்டு வாருங்கள்” என்றும் சொன்னார்.

ஜனாதிபதி செயலகம் தொடர்பாக உண்மையில் நடைபெற்ற விடயங்களை அவர் தூதுவர்களுக்கு வரிசைக் கிராமமாகத் தெளிவுபடுத்தினார்.

“அவர்கள்(போராட்டக்காரரர்கள்) ஜனாதிபதி செயலகத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருக்கின்றார்கள். அது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அவர்களுக்குக் கையளிக்கச் சென்றபோது அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டார்கள். வேறு வழி இல்லாததால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *