
இரத்தவாடையை ருசிப்பவர்களான ராஜபக்ஷகளையும் ,ரணிலையும் வீட்டுக்கு அனுப்பி மக்களின் விருப்பத்தோடு ஜனநாயக ஆட்சி ஒன்றினை உருவாக்கிக் கொள்ளும் வரைக்கும் போராட்ட்ங்கள் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் .
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் இன்றைய தினம் கண்டனப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கோல்பேஸ் ”போராட்டக்காரர்கள் மீதான ரணில், ராஜபக்ஷக்களின் அராஜக, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து யாழில் இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் .
சதா காலமும் இரத்த வாடையினை ருசிப்பவராக ,1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் 1981 ஆம் ஆண்டு யாழ். நூலகத்தினை எரித்து புத்தகங்களைக் கொளுத்திய பாவி ரணில் இரத்த வாடையினை தொடர்ந்து ருசிப்பதற்காக 106 நாட்கள் அமைதியாக போராடிய போராட்டக்கக்காரர்கள் மீது வன்மையான முறையில் காட்டுமிராண்டித்தனமாக அடக்கு முறையினை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் .
பெண்கள் ,வயோதிபர்கள் ,குழந்தைகள் ,ஊமையானோர் போன்ற அனைவர் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு எந்த மனிதனுக்கு அவ்வாறான மனநிலை வரும் .
இது 1989,1981 ஆம் ஆண்டு அல்ல 2022 ஆம் ஆண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
நவீன சிந்தனையுடைய இளைஞர்களை அடக்கி, ஒடுக்கி ”கோல்பேஸ் ”போராட்டத்தினை முடித்து விடலாம் என்று நினைத்தால் அது தவறு.
இளைஞனர்கள் கூட்டம், எவ்வாறு ராஜபக்சக்களை முடித்தார்களோ அதேபோன்று ரணிலையும் முடிப்போம் என சபதம் பூண்டுள்ளார்கள்.
ராஜபக்ஷக்களோடு நிறுத்தி விடாமல் ரணிலையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பி முடித்து விடக்கூடிய போராட்டம் ஒன்று உள்ளது .
இந்த போராட்டத்திற்கு முன்பை விட அதிக வலுவோடு இளைஞர்கள் புறப்பட்டுள்ளார்கள்.
தனது பண பலத்தினால் பணத்தை வீசி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அந்த விலையின் மூலமே நீ ஆட்சிக்கு வந்திருக்கிறாய்.
இந்த பாராளுமன்றம் என்பது மக்களுக்கு புறம்பாக செயற்படுகின்றது .
எனவே இந்த ராஜபக்ஷக்களை, ரணில் விக்கிரமசிங்கவை கூண்டோடு விரட்டியடித்து மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், புதிய தேர்தல் ஒன்றினை நடாத்த வேண்டும் ,மக்களின் அனுமதி இல்லாத அரசாங்கத்தை வீழ்த்தி விட்டு மக்களின் விருப்பத்தோடு ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆட்சியினை உருவாக்கிக் கொள்ளும் வரைக்கும் போராட்டம் தொடரும் – என்றார் .
பிறசெய்திகள்