இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தை தன் சுகபோகத்திற்காக வடிவேல் சுரேஸ் பயன்படுத்துகிறார். விரைவில் இச்சங்கம் ஐ.தே.க வசமாகும் என முன்னாள் அம்பேகமுவ பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முருகையா ரவீந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அங்கமாக காணப்பட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து செயலாற்றுமென ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா பெருந்தோட்டதுறை அமைப்பாளர் முருகையா ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புடன் இணைந்த தொழிற்சங்கம் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்.
இச்சங்கத்தில் 2016ம் ஆண்டு தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட வடிவேல் சுரேஸ் தற்போது தான் நிரந்தர பொதுச்செயலாளரென கூறுகின்றார்.
ஆனால், அவர் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது.காரணம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் வருவற்தற்கே வாய்ப்பு உள்ளது. அச்சந்தர்ப்பத்தில் வடிவேல் சுரேஸ் வெளியேற்றப்பட்டு இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாக வழமைப்போல் செயற்படும்.
மலையக மக்களின் சந்தாப்பணம் உட்பட மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சங்கத்தை தன் சுகபோகத்திற்காக வடிவேல் சுரேஸ் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும் இம்மாதம் 25ம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு காணப்படுவதாகவும் அப்போது தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திரும்புமெனவும் அதன்பிறகு மீண்டும் புதுப்பொழிவுடன் மலையக மக்களுக்காக அவர்களின் நலனுக்காக இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் செயற்படுமென எனவும் முருகையா ரவீந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.