24 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் வட மாகாணம் உட்பட யாழ் போதனா வைத்தியசாலைக்கு S.K.நாதனால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் நேற்றைய தினம் மருத்துவ நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்காலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி பொருளாதார அவசரநிலை மற்றும் சமூகமட்ட நோயாளர் நல அத்தியாவசிய நிலை காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர வேண்டுகோளிற்கமைய S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா (S.Janaka Sri Chandraguptha) மற்றும் டொக்டர் அன்வர் ஹம்தானி (Dr.Anvar Hamdani) ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக சுகாதார அமைச்சின் செயலகத்தில் 21.07.2022 அன்றையதினம் S.K.நாதன் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட நன்கொடை மருந்துகள் வடமாகாண வைத்தியசாலைகள் வைத்தியசாலைகளுக்கு மிக விரைவில் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளரால் உறுதியளிக்கப்பட்டது.
தற்போது இலங்கையின் பல வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை நிலவும் அதேவேளை அவற்றை பெற்றுக்கொள்வதிலும் பல இடர்பாடுகளும் சிரமமும் காணப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் பல மருத்துவ பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும், அதனை பெற்றுத்தரும்படி கோரிக்கைகளை முன்வைத்துவரும் நிலையில் முன்னுதாரணமாக வடபகுதிக்கான மருத்துவ வளங்களில் அதிகூடிய கரிசனையுடன் செயற்படும் S.K. நாதனின் இவ் மானுட மருந்துவ சேவை சிறப்பானதாகும்.
குறித்த அறக்கட்டளையின் ராவ் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு, வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் அவர்களிடம் ரூபா 860,000 பெறுமதியான தற்போது தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி S.K முதியோர் இல்லம், S.K.அறிவுச்சோலை சிறுவர் இல்லம், காரைநகர் S.K நாதன் நற்பணிமன்றம் ஆகியவற்றின் நிறைவேற்று இயக்குனரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு,
1- கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள்.
2- யாழ் பல்கலைகழக மருத்துவப் பீடத்திற்கு PCR இயந்திரம்.
3- யாழ் போதனாவைத்தியசாலைக்கு CT scan இயந்திர கொள்வனவுக்காக 02 கோடி ரூபாய்.
என வடக்கின் மருத்துவ துறைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கியுள்ளார்.
Covid 19 நிலவிய போது மருத்துவ பொருட்கள் , பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்