மட்டு நகரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு சைவ மங்கையர் கழகம் மற்றும் லியோ கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் “எமது போசணையில் வீட்டுத்தோட்டத்தின் பங்களிப்பு” எனும் தலைப்பில் கலாநிதி. க. பிரேமகுமார் , “இயற்கை விவசாயம்” எனும் தலைப்பில் பத்மநாதன் அவர்களும் பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வுக் கருத்துக்களையும், தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் கல்லடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதன் போது எமது பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள், போசணைப் பதார்த்தங்கள், விட்டமின்கள் போன்றவற்றின் முக்கியத்துவம், எமது உடலுக்குத் தேவையான அனைத்துப் போசணைகளையும் வீட்டுத் தோட்டங்களிலிருந்தே எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் எந்தெந்த தாவரங்களில் என்னென்ன போசணைப் பதார்த்தங்கள் உள்ளன போன்ற பல்வேறு விடயங்கள் கலாநிதி.க.பிரேமகுமாரால் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோன்று இரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் எவ்வாறு வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்வது, சூழலுக்கும், மண்ணிற்கும் பாதிப்பற்ற முறையில் இயற்கையான பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது என பல்வேறு விடயங்கள் பத்மநாதன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

கருத்தரங்கின் முடிவில் வருகைதந்த அனைவருக்கும் கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இக்கன்றுகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலேந்திரன் மகேந்திரராஜா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

நாடு எதிர்நோக்கியுள்ள விலைவாசி அதிகரிப்பு மற்றும் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடான நிலைகளில் அனைவரும் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபடவேண்டியது அவசியமானது. இதனை உணர்ந்து இவ்வாறான பயனுள்ள கருத்தரங்கை சைவ மங்கையர் கழகம் மற்றும் லியோ கழகம் இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *