22 ஆவது  அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு?

கொழும்பு,ஜுலை 25

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள 22 ஆவது  அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது.

அத்துடன், இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலப்பகுதியில் பிரதமர் மீது நாடாளுமன்றம் நம்பிக்கை இழந்துள்ளதாக ஜனாதிபதி கருதினால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமருடன் கலந்தாலோசிக்காது, ஜனாதிபதி எந்த ஒரு நியமனத்தினையும் வழங்கவோ  அல்லது பணிகளை மாற்றவோ முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலம் நாடாளுமன்ர நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *