
கொழும்பு,ஜுலை 25
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில், வழமையான நேர அட்டவணைக்கமைய பாடசாலைகள் திறக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மாணவர்களுக்கு ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் அனைத்து பாடசாலைகளும் வாரத்தில் ஐந்து நாட்களும் திறக்கப்படும் என மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பாடசாலைகள் இன்று முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் இவ்வாறு திறக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் பாடசாலைகளை வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் இன்று முதல் திறக்கப்படுகின்ற போதும், போதிய எண்ணிக்கையிலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் இன்றைய தினம் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்