ஜனாதிபதி செயலகம் இன்று மீண்டும் திறப்பு!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்டு ஜனாதிபதி செயலகம் முற்றாக ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் பலவந்தமாக ஆர்ப்பாட்டகாரர்களை ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதுடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு முற்றாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அலுவலகம் இன்று (25) மீண்டும் திறக்கப்படும் என இலங்கை பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை முதல் அலுவலகம் மீண்டும் திறக்கத் தயாராக உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு பேச அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட மறுத்துள்ளார்.

போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் அலுவலகத்திற்குச் சென்றதாக அவர் AFP செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மே 9 முதல் நீடித்த முற்றுகை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.எச். கமல் குணரத்ன நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், செயலகம் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *