
மியன்மார்,ஜுலை 25
மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர். கடந்த 4 தசாப்த காலத்தில் மியன்மாரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவை என நம்பப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியொ ஸேயா தாவ், எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான கோ ஜிம்மி, ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என மியன்மார் அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
மியன்மார் அரச நிர்வாகப் பேரரவையின் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் 2021 பெப்ரவரியில், ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் அரசாங்கத்தை மியன்மார் இராணுவம், இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இராணுவப் புரட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட மியன்மார் தேசிய ஐக்கிய அராசாங்கம் எனும் நிழல் அரசாங்கமானது மேற்படி கொலைகளை கண்டித்துள்ளது.