கிண்ணியா வலயக் கல்விக்குட்பட்ட பாடசாலைகள் யாவும் இன்று (25) மூடப்பட்டிருந்தன. கிண்ணியா வலய அதிபர், ஆசிரியர்கள் எரிபொருள் கோரி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் கல்வி நடவடிக்கைகள் முடங்கின.
இதனால் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கிண்ணியா கல்வி வலயத்தில் கிண்ணியா கோட்டம்,முள்ளிப்பொத்தானை, குறிஞ்சாக்கேணி என மூன்று கோட்டக் கல்வி பிரிவு காணப்படுகிறது.
கடந்த இரு வாரங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.எம்.எம். முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்,
அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் கோரி பாடசாலைக்கு செல்வதில்லை என்று, நேற்று (24) நடைபெற்ற அதிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக whatsapp மூலம் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, சகல ஆசிரியர்களும் அதிபர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு “பெற்றோல் இல்லாமையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை” என்று குறுஞ்செய்தி அனுப்புவதென்றும் பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஆசிரியர்கள் சுகவீன லீவு எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு ஆசிரியர்கள் லீவு என்பதை மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்களுக் ஊடாக தெரியப்படுத்துவதோடு, அதிபர்கள் தங்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர்களுக்கு “பெற்றோல் இன்மையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை” என்று குறுஞ்செய்தி மூலம் மூலம் லீவு அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதிபர் ஆசிரியர்கள் தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் அவமானப் படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே, கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால், அதிபர், ஆசிரியர்கள் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிரத்தியேக வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருந்த போதிலும் இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படக்கூடாது எனவும் பெற்றார்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிற செய்திகள்