
சிறப்புத் திறன்மிக்க வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவான இலங்கைத் தொழிலாளர்களுக்கு விவசாயத் துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய தாதிய சேவைகள் மற்றும் உணவு பானங்கள் சேவைகளுக்கு மேலதிகமாக விவசாயத் துறையிலும் தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
விவசாயத் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு ஜப்பானிய மொழித் தேர்ச்சியுடன் கூடுதலாக தொழில்முறை தகுதிகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 17 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில்வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 29 மற்றும் 31, ஆம் திகதிகளிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2, 3, 5, 7,8, 9, 10, 19, 21, 23, 24, 25, 26 மற்றும் 28, திகதிகளிலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1, 2, 4, 6, 7, 9 மற்றும் 11, ஆம் திகதிகளிலும், எதிர்வரும் ஒக்டோபர் 11,12,13,16,18,19,20 மற்றும் 23 ஆம் திகதிகளிலும், எதிர்வரும் நொவெம்பர் மாதம் 8, 9,10, 13, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் இணையம் வாயிலாக நடத்தப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
மாதாந்தம் அதிகபட்சமாக 150 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்பதோடு, பரீட்சை கட்டணம் 3,500 ஜப்பானிய யென் அல்லது 6 ஆயிரத்து 300 ரூபாய் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்