
கொழும்பு, ஜூலை 25
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசி மருந்தின் காலாவதித் திகதியை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பரிந்துரையின்படி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகங்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், அனைத்து மாவட்ட பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள், மற்ற அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், சேமிக்கப்பட்ட திறக்கப்படாத தடுப்பூசி இருப்புகளின் காலாவதி காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து பன்னிரண்டு மாதங்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ஃபைசர் தடுப்பூசி முகாமையின் இந்திய ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான சிரேஷ்ட முகாமையாளர் தெரிவித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஃபைசர் தடுப்பூசி கையிருப்புகளின் காலாவதித் திகதி ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.