நாட்டில் கடந்த சில மாதங்களாக நீடித்துவரும் எரிபொருள் பிரச்சனைக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேவேளை எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கத்தால் பல்வேறு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் அவை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரியவாறு செயற்படுத்தப்படாத நிலையில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுக்குமிடையே ஆங்காங்கே வாய்த்தர்க்கங்களுடன் மோதல்கள் இடம்பெற்ற சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இவ்வாறான நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் தமது வாகனங்களுடன் அதிகாலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே காத்துக்கிடக்கின்றனர்.
இதேவேளை கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்குக்கும் முச்சக்கர வண்டிகளுக்கிடையில் புடைவைக் கடைகளில் உடைகளை காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தலையில்லா உடல்களை வைத்து தமக்கான இடத்தை ஒதுக்கிவைத்துள்ள முச்சக்கர வண்டி சாரதியின் செயற்பாட்டை பார்த்து அங்குள்ளவர்கள் திகைப்புடன் அவ்விடத்தை விட்டு கடந்து செல்கின்றனர்.

