இலங்கைக்கு இதுவரை 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள இந்தியா, எதிர்காலத்தில் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மூலம் புதிய துறைகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்தித்தாள் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, எந்தெந்த துறைகளில் முதலீடுகள் செய்வது என்பது குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த இந்திய முதலீட்டாளர்கள் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் விவசாயம் மற்றும் பால் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற சில முக்கிய துறைகளில் தமது வாய்ப்புக்கள் குறித்து ஆராயவுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் கூட்டு ஒத்துழைப்பின் கீழ் திருகோணமலைக்கு அருகில் கிழக்கே உள்ள சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை நிறுவுவதற்கு இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் லிமிடெட் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில், இலங்கையின் சொந்த தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இலங்கைக்கு உதவ முன்வருவதற்கு இந்தியா வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிறசெய்திகள்