எரிபொருள் நெருக்கடி மற்றும் நாளாந்த மின்வெட்டு ஆகியவற்றுக்கு இன்னும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் ஆசீர்வாதமின்றி அரசாங்கத்தை நீண்ட காலம் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எரிசக்தி அமைச்சர் ஒருபுறம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் எரிபொருள் வரிசைகள் குறையாது. அரசாங்கத்தை மாற்றுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும் அதேவேளை காலி முகத்திடலை வெறுமனே ஒரு இடம் எனக் கூறி மக்களின் போராட்டம் முடிவுக்கு வராது.
மக்களின் பசியே உண்மையான போராட்டம். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு இணங்க தற்போதைய சூழ்நிலையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தயாராக இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 14 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியதையும் அவர் மறுத்துள்ளார்.
வாக்கெடுப்புக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை என கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்