
QR குறியீட்டு முறைமையின் அடிப்படையில் வாகனங்களுக்கான வாராந்த பெற்றோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, முச்சக்கரவண்டிக்கு 5 லீற்றரும், சிற்றூர்ந்துகளுக்க 20 லீற்றரும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரும் பெற்றோல் மற்றும் டீசல் என்பன வாராந்தம் ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன், உந்துருளிக்கு 4 லீற்றர் பெற்றோலும், பேருந்துக்கு 40 லீற்றர் டீசலும் வாராந்தம் ஒதுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சகல முச்சக்கரவண்டிகளையும் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையத்தில் பதிவு செய்து, எரிபொருள் நிலையம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும்.
தங்களது வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் இவ்வாறு பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கி கொள்ள முடியும்.
செசி எனப்படும் அடிச்சட்ட இலக்கம் மூலம் குறியீடு முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன பயனர்கள் வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான வரி அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறியீடு முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைமையின் கீழ் எதிர்வரும் முதலாம் திகதி வரை வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்