
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடுகின்றது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக வஜிர அபேவர்த்தனவின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு சென்ற நிலையில் தற்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால், குறித்த ஆசனம் வெற்றிடமாகி இருந்தது.
இதனால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.
அதன் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருக்கு அனுப்பி இருந்த கடிதத்தின் பிரகாரம், ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் முகாமைத்துவ சபையின் பூரண அனுமதியுடன் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தனவின் பெயரை கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருந்த ஆசனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக வஜிர அபேவர்த்தனவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு கடந்த வாரம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்திருந்தது.
அதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடும்போது வஜிர அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.
பிறசெய்திகள்