நாட்டுக்கு ஆபத்தான ஒப்பதங்களை அமெரிக்காவுடன் செய்ய முற்படும் ரணில்!

நல்லாட்சி அரசாங்கத்தில் அமெரிக்காவுடன் செய்துகொள்ள முடியாமல்போன ஒப்பந்தங்களை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதால் அதனை மேற்கொள்ளும் அபாயம் இருக்கின்றது.

நாட்டுக்கு ஆபத்தான ஒப்பதங்களை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் ஆணை இல்லாமலே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக ராஜபக்ஷ்வினரே அவரை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க உதவியாக இருந்தனர்.

பொதுஜன கட்சியின் தவிசாளர் பசில் ராஜபக்ஷ் அமெரிக்க பிரஜா உரிமை உடையவர். ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க தனது கட்சியை இணக்கப்பாட்டுக்குகொண்டுவர அவரே பின்னால் இருந்து செயற்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு தேவையான முறையில் ஆட்சியை கொண்டு செல்லவே ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் அமெரிக்காவுடன் 3 ஒப்பந்தங்களை செய்துகொள்ள ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருந்தார். அதில் அக்டா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது, ஏனைய இரண்டு ஒப்பந்தகளான எம்.சி.சி மற்றும் சோபா ஆகிய இரண்டு ஒப்பந்தங்களும் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும். எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் எமது காணிகள் அமெரிக்காவுக்கு பரிபோகும் அபாயம் இருக்கின்றது. அதேபோன்று சோபா ஒப்பந்தம் மூலம் அமெரிக்க இராணுவம் எமது நாட்டுக்குள் எந்த தடையும் இல்லாமல் வருவதற்கு இடமளிக்கப்படுகின்றது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் ஜனாதிபதி. அதனால் நாட்டுக்கு ஆபத்தான இந்த ஒப்பந்தங்களை மீண்டும் மேற்கொள்வார் என்ற அச்சம் இருக்கின்றது.

நாட்டுக்கு ஆபத்தான இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க முயற்சித்தால் அதனை தடுப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான நிலைமையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

மாறாக அமெரிக்காவுக்கு நாட்டை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *