வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கல்கிஸ்ஸ, ஜுலை 28

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலானை சில்வா மாவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *