நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் அந்தோனி வெரங்க புஷ்பிகா!

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 09 ஆம் திகதி கோட்டையிலும், ஜூன் மாதம் 10 ஆம் திகதி பத்தரமுல்ல இசுறுபாயவிற்கு முன்பாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமைக்காக புஷ்பிகா நேற்று(புதன்கிழமை) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதான தொடம்துவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு – கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளராக ஒருவராக ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா செயற்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *