கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
3 மாணவர்கள் பெரிய தம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் மாயமானார்.
இவ்வாறு காணாமல் சென்ற பெரியநீலாவணை 1 பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் புதன்கிழமை (27) மாலை கரை ஒதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சுமார் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்தனர்.
வழமை போன்று குறித்த கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்துச் சென்றுள்ளது.
இதில் இருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய மாணவரை தேடும் பணியில் கடற்படையினர் கடற்தொழிலாளர்கள் உறவினர்கள் ஈடுபட்டிருந்த பின்னர் புதன்கிழமை (27) மாலை குறித்த கடற்பகுதிகளில் இருந்து சடலம் பொதுமக்கள் முன்னிலையில் மீட்கப்பட்டது.
மேலும் சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



பிறசெய்திகள்